குளத்தூர்,ஜன.13: குளத்தூர் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றவிழா நடந்தது. பனையூர் கிராம கல்வி சங்க தலைவர் தாளமுத்து தலைமை வகித்து பேசினார். கிராமத்தலைவர் சின்னச்சாமி, துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மரியஅனிதா வரவேற்று பேசினார். ஆசிரியை பரமேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியர் பேதுரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆங்கில அறிவை வளர்ப்பது எப்படி என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் ஆங்கிலமொழி பாடல்கள் பாடி, கதைகள் கூறி நடனமாடி, ஆங்கிலத்தில் பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். ஆசிரியை மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர். ஆங்கில மன்ற பொறுப்பு ஆசிரியை திலகசெல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.