×

14 ஒன்றியங்களில் 6 தலைவர் பதவி திமுக கைப்பற்றியது

திருவள்ளூர், ஜன. 12: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதில், 4 ஒன்றியங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 10 ஒன்றியங்களில் 6 ஒன்றிய குழு தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், 14 ஒன்றியங்களுக்கு உட்பட்டு 230 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும், கூட்ட அரங்கில் நடைபெற்றது. இத்தேர்தலை முறையாக நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை பின்பற்றி, மறைமுக தேர்தலை, சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி நடத்த, ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அலுவலக ஊழியர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர்.

தொடர்ந்து காலை 11 மணியளவில் அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் துவங்கியது. இதில், போதிய கோரம் இல்லாததால், திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற 10 ஒன்றியங்களில் மட்டும் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவராக ஜெயசீலி ஜெயபாலன்(திமுக), துணைத்தலைவராக பர்க்துல்லா(திமுக), பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவராக எம்.ஜெயக்குமார்(திமுக), துணைத்தலைவராக பரமேஸ்வரி கந்தன்(திமுக), சோழவரம் ஒன்றிய குழு தலைவராக எம்.ராஜாத்தி (திமுக), துணைத் தலைவராக வெ.கருணாகரன் (திமுக), புழல் ஒன்றிய குழு தலைவராக கே.தங்கமணி (திமுக), துணைத்தலைவராக பா.சாந்திபாஸ்கர்(திமுக), மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவராக கே.ரவி( திமுக), துணைத்தலைவராக பா.தமிழ்ச்செல்வி(திமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வில்லிவாக்கம் ஒன்றிய குழுதலைவராக கிரிஜா (திமுக),ஒன்றிய குழுதுணைதலைவராக ஞானபிரகாசம் (பாமக) ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவராக கி.ரமேஷ் (அதிமுக), துணைத்தலைவராக க.சுரேஷ் (அதிமுக), கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக சுஜாதா சுதாகர் (அதிமுக), துணைத்தலைவராக ஆர்.சரஸ்வதி ரமேஷ் (திமுக), கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக கே.சிவக்குமார் (அதிமுக), துணைத்தலைவராக கு.மாலதி (திமுக), பூண்டி ஒன்றிய குழு தலைவராக பி.வெங்கடரமணா (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு 10 ஒன்றியங்களில் 6ல் திமுக ஒன்றிய குழு தலைவர் பதவிகளை கைப்பற்றி உள்ளது. கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில் அதிமுக தலைவர் பதவியை கைப்பற்றினாலும், துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

526 ஊராட்சிகளிலும் துணைத்தலைவர் தேர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஊராட்சிகளிலும் நேற்று துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற கட்சியினரிடையே பலத்த போட்டி நிலவியது. இங்கும், அதிமுக மற்றும் திமுக ஆதரவு பெற்ற கட்சியினரும், கட்சி சாராதவர்களும் துணைத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags : DMK ,unions ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி