×

வடசென்னை பகுதிகளில் புதிதாக 500 சிசிடிவி கேமராக்கள்: கமிஷனர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் “காவலன் செயலி” அறிமுகப்படுத்தப்பட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே காவலன் செயலியை கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில், பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதமாக புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை திலகர் நகர், சேனியம்மன் கோயில் தெரு, கொருக்குப்பேட்டை பாரதி நகர், காசிமேடு பவர்குப்பம் ஆகிய பகுதிகளில் ₹30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 500 சிசிடிவி கேமராக்களை கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்கவும் முடிகிறது. இதனால் காவலர்களுக்கு மன அழுத்தம் உடல்சோர்வு ஏற்படுவதில்லை. 2010க்கும் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.

இதனால் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தது. மாணவர்கள், பழைய குற்றவாளிகளும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுவந்தனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்திய பிறகு 50 சதவீத குற்றங்கள் குறைந்துளளன. காவலன் செயலி தொடங்கியதிலிருந்து 10 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.  பெண்களுக்கு இது உதவியாக உள்ளது. இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில், வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன், வடக்கு இணை ஆணையர் கபில் சிபில் குமார் சரத்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : North Chennai ,
× RELATED வடசென்னை பாஜ வேட்பாளர்...