×

தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு

தஞ்சை, ஜன.12: தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுக வை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மறைமுக தேர்தலுக்கு வருகை தரவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 127 பேர் போட்டியிட்டனர். இதில் 21 இடங்களில் திமுகவும், 6 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று தஞ்சை பனகல் கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவருக்கான மறைமுக தேர்தலுக்கு திமுக வைச் சேர்ந்த பாலகுரு, இளவரசி, ராஜா, சரவணன், சங்கர், முரளி, முத்துசெல்வம், தாமரைச்செல்வன், பாத்திமாஜான், வெங்கடசாமி, பொருட்செல்வி, பரிமளா, உதயன், உஷா, அம்பிகா, சுபா, விஜி, திருஞானசம்மந்தம், செந்தாமரை, மூர்த்தி, சுவாதி ஆகிய 21 உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 27வது வார்டு உறுப்பினர் இலக்கியா ஆகிய 22 பேர் வருகை தந்திருந்தனர்.
15வது வார்டு அதிமுக உறுப்பினர் வினுபாலன் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்ததால் அவர் வரவில்லை. அதேசமயம் அதிமுக வைச் சேர்ந்த மற்ற 5 உறுப்பினர்களாக கண்ணபிரான், சுமதி, சகுந்தலா, விஜயலட்சுமி, ரஞ்சிதம் ஆகிய உறுப்பினர்களும் வரவில்லை.
இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக வை சேர்ந்த 14வது வார்டு உறுப்பினர் உஷா போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட ஊராட்சி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உஷா விற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாலை நடைபெற்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் 7வது வார்டு திமுக உறுப்பினர் எஸ்.கே.முத்துச்செல்வம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, தஞ்சை ஒன்றிய தலைவர் வைஜெயந்திமாலா மற்றும் துணை தலைவர்கள் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் தஞ்சையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Usha ,DMK ,Tanjore ,district panchayat leader ,
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...