அவிநாசி,ஜன.12: அவிநாசி அருகே சேவூரில் சித்தர் முத்துக்குமாரசுவாமி ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 7ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையடுத்து தினசரி சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலின் அருகில் அமைத்துள்ள முத்துக்குமாரசுவாமியின் ஜீவசமாதியில் காலை, மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில்கோவிலில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல். அதைத்தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பகலில் சித்தர் முத்துக்குமார சுவாமியின் ஜீவ சமாதியிலிருந்து பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி தேர் இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.