×

உடுமலை, மடத்துக்குளத்தில் ஒன்றிய தலைவர் பதவி தி.மு.க. வசமானது

உடுமலை,ஜன.12:  உடுமலை, மடத்துக்குளம் ஒன்றிய தலைவர்கள் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. குடிமங்கலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், பஞ்சாயத்து துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் திருப்பூரில் நடந்தது.
உடுமலை ஒன்றியம்: உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் சுப்பிரமணியம் முன்னிலையில் நடந்தது.
மொத்தமுள்ள 26 கவுன்சிலர்களில், தி.மு.க.வுக்கு 18, அதி.மு.க.வுக்கு 7, சுயேச்சை 1 இடத்தில் வெற்றி பெற்றிருந்தனர். தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி என்ற நிலையிலும்கூட, அ.தி.மு.க. சார்பில் மோகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தி.மு.க. சார்பில் மகாலட்சுமி முருகன் போட்டியிட்டார். இதனால் வாக்குப்பெட்டி வைத்து தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் மகாலட்சுமி முருகன், சுயேட்சையுடன்  சேர்த்து 19 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில், தி.மு.க.வை சேர்ந்த சண்முகவடிவேல் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மடத்துக்குளம் ஒன்றியம்:
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 9 கவுன்சிலர்களில், தி.மு..க.வுக்கு 6, அ..தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரசுக்கு தலா ஒருவர் உள்ளனர். இதனால் தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த காவியா மட்டுமே களத்தில் நின்றார். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் காவியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக தி.மு.கவை சேர்ந்த ஈஸ்வரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆணையர் சாதிக்அலி சான்றிதழ் வழங்கினார்.
குடிமங்கலம் ஒன்றியம்: குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 கவுன்சிலர்களில், அ.தி.மு.க.வுக்கு 7, தி.மு.க.வுக்கு 5, சுயேச்சை ஒருவர் உள்ளனர்.
அ..தி.மு.க. சார்பில் சுகந்தி முரளி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தி.மு.க. வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் சுகந்தி முரளி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த புஷ்பராஜ் வெற்றிபெற்றார். அவர்களுக்கு ஆணையர் ரெனால்டு சான்றிதழ் வழங்கினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் நேற்றே பதவி ஏற்றுக்கொண்டனர்.

Tags : Union leader ,Udumalai ,Madathukulam ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...