×

வேலை செய்த நிறுவனத்தில் திருடிய பணத்தை கொடுக்காமல் மிரட்டல்

கோவை ஜன. 12:கோவையில்  வேலை செய்த நிறுவனத்தில் திருடிய பணத்தை கேட்ட நிறுவன உரிமையாளருக்கு கொலை  மிரட்டல் விடுத்த வாலிபர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி கே.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (52). இவர் அதே பகுதியில் ஆர்.எல்.எம். ஏஜென்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துடியலூர் அடுத்த கண்ணப்பன் நகரை சேர்ந்த ஐயப்பன் (27), நவீன்ராஜ் (30) ஆகிய 2 பேர் வேலை பார்த்தனர். அப்போது இரண்டு பேரும் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் திருடியதாக தெரிகிறது. இதையறிந்து கேட்ட ராஜலட்சுமியிடம் இரண்டு மாதங்களில் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நீண்ட நாட்களாக அவர்கள் 2 பேரும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து ராஜலட்சுமி கேட்டு வந்தபோதும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜலட்சுமி தனது மருமகள் மோனிகாவுடன் கண்ணப்பன் நகரில் உள்ள ஐயப்பன் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த நவீன்ராஜ், அய்யப்பனுடன் சேர்ந்து பணம் கொடுக்க மறுத்து அவர்களை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ராஜலட்சுமி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீதும் தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : work company ,
× RELATED வேலை செய்த நிறுவனத்தில் திருடிய பணத்தை கொடுக்காமல் மிரட்டல்