ஊட்டி, ஜன. 12: நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பார்வையிட்டார்.
01.01.2020ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் 2020 நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்த அதாவது 31.12.2001க்கு முன்னர் பிறந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதற்காக 11, 12 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு உரிய விண்ணப்பங்களை உரிய வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமே பெற்று ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, பலரும் சென்று வாக்காளர் பட்டியலை பார்த்து திருத்தங்களை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த சிறப்பு முகாமினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் நேற்று பார்வையிட்டார். ஊட்டி ஜோசப் கல்வியியல் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் நடந்த இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.