×

ஊராட்சி ஒன்றியங்களில் திமுக வெற்றி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஊட்டி, ஜன. 12: நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியை கைப்பற்றிய நிலையில், திமுக.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சியில் திமுக., தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றியது. அதேபோல் குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக.,வை சேர்ந்த கவுன்சிலர்கள் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். நேற்று பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் துணைத் தலைவர் பதவியை திமுக., கைப்பற்றியது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற நிர்வாகிகள் ஊட்டியில் உள்ள மாவட்ட திமுக., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தனர். அங்கு, மாவட்ட செயலாளர் முபராக்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தொடர்ந்து, வெற்றி பெற்ற தலைவர், துணைத் தலைவர்கள் மற்றும் திமுக., கவுன்சிலர்கள் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின், பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பாண்டியராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் துரை, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், துணைத் தலைவர் உமாராஜன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சித்ரா, அணிகளின் அமைப்பாளர் எல்க்ஹில்ரவி, இளைஞரணி துணை செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Victory Volunteers ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி