×

மாணவர்கள் தூங்கிக்கொண்டும் படிக்கலாம் அமைச்சர் பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சி

கோபி, ஜன. 12: மாணவர்கள் தூங்கிக்கொண்டும் படிக்கலாம் என அமைச்சர் பேசியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 கோபி அருகே உள்ள மொடச்சூரில் பூங்காவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்காக க்யூ.ஆர்.கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்யூ.ஆர்.கோடை பயன்படுத்தி மாணவர்கள் எங்கிருந்தாலும் ஆடியோ, வீடியோ முறையில் கல்வி கற்க முடியும். விளையாடிக்கொண்டும், படுத்து தூங்கிக்கொண்டும் கூட கல்வி கற்க முடியும் என்றார். தூங்கிக்கொண்டே படிக்க முடியும் என்ற அமைச்சர் பேச்சால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சில சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. அனைத்து பள்ளிகளும் கட்டாய இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை போன்ற நகரங்களில் இது போன்ற நிலைமை உள்ளதாக புகார் வந்துள்ளது. அடுத்த ஆண்டு இது போன்ற நிலை இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பர்கூர் மலைப் பகுதியில் உள்ள சுண்டப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அரசு ஆவணங்களை எடுத்துச்சென்றதால் மற்ற ஆசிரியர்கள் அவரை தாக்கி உள்ளனர்.
 இது குறித்து துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். காலை உணவு வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள்தான் காலை உணவு வழங்கி வருகிறது. காலை உணவு வழங்க இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் காலை உணவு வழங்குவதில் கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால், பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அரசு பள்ளிகளில் வினாத்தாள் வழங்குவதற்காக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. ஏழை மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த அரசு பரிசீலிக்கும் என்றார்.
பொங்கலையொட்டி வருகிற 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டபோது, முதல்வருடன் இது பற்றி பேசி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Tags : minister ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...