×

2 மாத பரோல் முடிகிறது பேரறிவாளன் இன்று புழல் சிறையில் அடைப்பு சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.12: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 2 மாத பரோல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கடந்த 2018ம் ஆண்டு மாற்றப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஒரு மாதம் பரோலுக்கு ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, பேரறிவாளன் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியிலும், தந்தை குயில்தாசனுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் உடன் சென்று வந்தார். இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கிய ஒரு மாத பரோல் டிசம்பர் 13ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், பேரறிவாளன், தந்தையின் உடல்நலக்குறைவால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கும் சிறைத்துறைக்கும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. 2 மாத பரோல் இன்றுடன் நிறைவுடைய உள்ளது. எனவே பேரறிவாளன் இன்று மாலைக்குள் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED இளம்பெண் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு...