×

மின்சாரம் தாக்கி இறந்த யானையை புதைத்த இடத்தில் கண்ணீர் விட்ட ஒற்றை யானை குடியாத்தம் அருகே நெகிழ்ச்சி

குடியாத்தம், ஜன.12: குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த யானை புதைக்கப்பட்ட இடத்தில் ஒற்றை யானை கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் இரண்டு ஒற்றை யானை தனித்தனியாக சுற்றிதிரிந்து வந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொட்டமிட்டா கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஒற்றை யானை திடீரென புகுந்தது.இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்தும் ஒற்றை யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல், குடியாத்தம் அடுத்த டிடி.பாளையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி யானை ஒன்று இறந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை அதே இடத்தில் அடக்கம் செய்தனர். ஏற்கனவே இறந்த யானையை தேடி மற்றொரு ஒற்றை யானை வந்தது. புதைக்கப்பட்ட இடத்தில் யானை பிளிறியபடி கண்ணீர் சிந்தியது. அங்குள்ள கிராம மக்கள் யானையின் செயலை மறைந்திருந்து கண்டு நெகிழ்ச்சியடைந்தனர். முன்னதாக, கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்து அந்த யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இறந்த யானையை தேடி யானைக்கூட்டம் அடிக்கடி ஊருக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : ceiling ,
× RELATED நில உச்சவரம்பில் கைப்பற்றிய நிலங்களை...