பாப்பாக்குடி, ஜன.12: வடக்கு அரியநாயகிபுரம் திருமுருகன் திருச்சபை சார்பில் 35வது பாதயாத்திரையை முன்னிட்டு திருமுருகன் சப்பர வீதியுலா நடந்தது. முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் திருமுருகன் திருச்சபை பாதயாத்திரை குழு பக்தர்கள் சார்பில் 35வது ஆண்டாக கடந்த கார்த்திகை 19ம் தேதி முதல் சிவன் கோயில் முருகன் சன்னதியில் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். தினமும் இரவு பஜனை பாடல்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முருகப் பெருமானின் சப்பர வீதியுலா நடந்தது. இதில் முருக பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வருகின்றனர். இந்நிலையில் திருமுருகன் திருசபையில் இருந்து சப்பர பவனி துவங்கியது. கீழ ரதவீதி, அக்ரகார தெரு மற்றும் அனைத்து ரதவீதிகள் வழியாக திருசபையை மீண்டும் வந்தடைந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி நடந்தது. முன்னதாக காலை சிறப்பு அபிஷேக தீபாராதனை, பிற்பகல் சிறப்பு அன்னதானம் நடந்தது. இன்று முருகபக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்படுகின்றனர். பொங்கலன்று திருசெந்தூரில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏற்பாடுகளை குருசாமி பெருமாள் கம்பர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பாதயாத்திரை குழுவினர் செய்துள்ளனர்.