×

அதிமுகவினருக்கு மட்டும் பொங்கல் பரிசு ரேஷன் கடையை திமுகவினர் முற்றுகை

ராசிபுரம்,  ஜன.10:  ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகரபுரம் ரேஷன் கடையில்  அதிமுகவினருக்கு மட்டும் ₹1000 மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கினர்.  இதுகுறித்த தகவலறிந்து வந்த திமுகவினர், எதிர்ப்பு தெரிவித்து ரேஷன்  கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ராசிபுரம் அருகேயுள்ள  சந்திரசேகரபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், கரட்டுப்பட்டி, பெரியூர்,  ஓனங்கரடு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1300 கார்டுதாரர்கள்  உள்ளனர். நேற்று காலை பொங்கல் பரிசு பொருட்களை வாங்க, ரேஷன்  கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடினர். அங்கு வந்த அதிமுக  பிரதிநிதிகள், தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு  பொருட்கள் மற்றும் ₹1000 ரொக்கத்தை வழங்கினர். காலையில் 3 மணி  நேரத்துக்கு மேலாக வரிசையில் நின்றிருந்த மற்ற கட்சியினர், பொதுமக்கள்,  தங்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்காதது குறித்து கேட்டனர். ஆனால்  ரேஷன் கடை ஊழியர்கள், முறையான பதில் கூறவில்லை. இதுகுறித்த தகவலறிந்து  அங்கு திரண்ட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர், ரேஷன் கடையை  முற்றுகையிட்டனர். ஒரு தரப்பினருக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்குவதை  தடுத்து நிறுத்தியதுடன், அனைவருக்கும் வழங்கக்கோரி வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து, சம்பவ இடத்திற்க்கு வந்த ராசிபுரம் போலீசார், திமுகவினருடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வரிசையில் நின்ற அனைவருக்கும்  பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.  இதனால் சமாதானமடைந்த திமுகவினர் முற்றுகையை கைவிட்டு கலைந்து  சென்றனர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்