நாமக்கல், ஜன.10: குமாரபாளையத்தில் தவறான சிகிச்சை அளித்த டாக்டர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ₹9.75 லட்சம் நஷ்டஈடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் இளவரசன். இவரது தந்தை சண்முகம். இவரது முகத்தில் இருந்த கொப்பளத்தை குணப்படுத்த, அங்குள்ள டாக்டர் பாலசுப்ரமணித்திடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார். இந்த சிகிச்சை செலவுக்கு ₹2.25 லட்சம் டாக்டர் பாலசுப்ரமணியம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சைக்கு பின், சண்முகம் கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர், அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குள்ள டாக்டர் விஜயன், பரிசோதித்து விட்டு, ஏற்கனவே தவறான சிகிச்சை அளித்ததால் தான் கோமா நிலைக்கு சண்முகம் சென்றதாக கூறி, உறவினர்களிடம் மருத்துவ சான்றிதழ் கொடுத்துள்ளார். பின்னர் சண்முகம் இறந்து விட்டார். இந்த சம்பவம், கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டில் நடந்துள்ளது.இதுகுறித்து இளவரசன், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கோட்டையன், தவறான சிசகிச்சை அளித்த, குமாரபாளையம் டாக்டர் பாலசுப்ரமணி மருத்துவ செலவு மற்றும் இழப்பீடாக ₹7.75 லட்சம் மற்றும் நஷ்ட ஈடாக ₹2 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.