×

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி வியாபாரியிடம் ₹9 லட்சம் மோசடி

ஓசூர், ஜன.10:  பேரிகை அருகே, குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி வியாபாரியிடம் ₹9 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45).  இவருக்கு சம்பத், பிரகாஷ் என்ற 2 பேர், முகநூல் மூலமாக பழக்கம் ஆனார்கள். அவர்கள் 2 பேரும், தங்களிடம் தங்கம் குறைந்த விலைக்கு உள்ளதாக சுரேஷ்குமாரிடம் கூறினர். இதைத் தொடர்ந்து கடந்த 4ம் தேதி, அவர்கள் சுரேஷ்குமாரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை பக்கமாக வருமாறு அழைத்தனர். அதை நம்பி சுரேஷ்குமார் ₹7 லட்சத்து 80 ஆயிரத்துடன் அங்கு சென்றார். அப்போது, அங்கிருந்த சம்பத், பிரகாஷ் ஆகிய 2 பேரும் சுரேஷ்குமார் கையில் வைத்திருந்த ₹7 லட்சத்து 80 ஆயிரம், 2 செல்போன்கள், 5 பவுன் தங்க நகை ஆகியவற்றை வாங்கி கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவற்றின் மதிப்பு ₹9 லட்சம் ஆகும்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ்குமார், இது குறித்து பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்