தேன்கனிக்கோட்டை, ஜன.10: தேன்கனிக்கோட்டை அருகே, ராகி மற்றும் வைக்கோல் போர்களை நாசப்படுத்திய 70 யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, அவரை, துவரை பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஜார்கலட்டி, மாரசந்திரம், லக்கசந்திரம் பகுதியில் உள்ள வயல்களில், யானைகள் புகுந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், யானை கூட்டத்தை நொகனூர் காட்டிற்கு விரட்டினர். ஆனால், கிராம மக்கள் தங்கள் பகுதிக்குள் விரட்ட வேண்டாம் என வனத்துறையினரிடம் தகராறு செய்து, எதிர் திசையில் பட்டாசு வெடித்ததால் யானை கூட்டம் மீண்டும் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தன.அப்போது, குருபட்டி, அந்தேவனப்பள்ளி கிராமங்களில் களத்தில் குவித்து வைத்திருந்த ராகி போர்களை தின்று நாசம் செய்தன. சேதம் செய்த ராகி பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர். தற்போது தேன்கனிக்கோட்டை பகுதியில் 70 யானைகள் முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த யானை கூட்டத்தை உடனடியாக கர்நாடக வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.