உடுமலை,ஜன.10:தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பாலதண்டபானி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள உலர்களத்தில் விவசாயிகள் அவ்வப்போது தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த நெல், மக்காச்சோளத்தை உலர வைப்பது வழக்கம். இதற்காக மக்காச்சோளம் ஒரு மூட்டைக்கு ரூ.18ம் ஒரு டன்னுக்கு ரூ.180ம் வாடகையாக சர்க்கரை ஆலை வசூலித்து வந்துள்ளது. தற்போது விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதால் உலர் களத்தில் விளைபொருட்களை உலர வைப்பதற்கு வாடகை வசூலிக்கக்கூடாது என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஆலை நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதி ஒரு மூட்டைக்கு ரூ.10ம் ஒரு டன்னுக்கு ரூ.100ம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது. விவசாயிகள் சங்கம் வரும் காலத்தில் இலவசமாக உலர்களத்தினை விவசாயிகள் பயன்படுத்த ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.