×

மஞ்சூர் அருகே மக்களுக்கு தொல்லை கொடுத்த குரங்குகள் கூண்டில் சிக்கின

மஞ்சூர், ஜன.10: மஞ்சூர் அருகே பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 25க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மஞ்சூர் அருகே உள்ள தொட்டகம்பை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் தேயிலை விவசாயத்துடன் பட்டானி, பீன்ஸ், அவரை, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட பல வகையிலான மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு கடந்த சில மாதங்களாக 100க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன.  விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர் செடிகளை பிடுங்கி நாசம் செய்வதுடன் திறந்துகிடக்கும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்வதும், பொருட்களை வாரியிறைப்பதும் வாடிக்கையாக உள்ளது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதையடுத்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொட்டகம்பை கிராமத்தில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டது. இந்த கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களால் கவரப்பட்ட குரங்குகள் ஒவ்வொன்றாக கூண்டுக்குள் சிக்கியது. 25க்கும் மேற்பட்ட குரங்குகள் சிறைபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தனியார் வாகனம் மூலம் தொலைதூரமுள்ள பெரும்பள்ளம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று குரங்குகளை விடுவித்தனர்.

Tags : Manjur ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...