×

மணமேல்குடி பகுதியில் 80 பன்றிகள் லாரியில் கடத்தல் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

மணமேல்குடி, ஜன.10: மணமேல்குடி அருகே 80 பன்றிகளை லாரியில் கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (55), இவரது மனைவி கண்ணம்மாள் (45) ஆகியோர் இணைந்து தங்களுக்கு சொந்தமான 80 பன்றிகளை மணமேல்குடி அடுத்த இடையாத்திமங்கலம் கண்மாய் பகுதியில் வளர்த்து வந்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு ஒரே இடத்தில் பன்றிகளை அடைத்து வைத்துவிட்டு இருவரும் தூங்கியுள்ளனர். அப்போது அங்கு ஒரு லாரியில் அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கி கயிறால் கட்டிபோட்டுவிட்டு அங்கு இருந்த 80 பன்றிகளையும் லாரியில் கடத்திச் சென்றனர். காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஆறுமுகமும், அவரது மனைவியும் தாக்கப்பட்டு கட்டி கிடப்பதை பார்த்துவிட்டு மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்த போலீசார் 80 பன்றிகளை கடத்திய கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் .


Tags : area ,Manamalgudi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...