×

தஞ்சை மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்

தஞ்சை, ஜன. 10: தஞ்சை மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நாளை முதல் 2 நாட்களுக்கு நடக்கிறது.இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு கடந்த டிசம்பர் 23ம் தேதி தஞ்சை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டரால் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், பொதுமக்களின் பார்வைக்காக வரும் 22ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும்.வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2020 தொடர்பான பணிகள் கடந்த 23ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் (நாளை) 11ம் தேதி மற்றும் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இக்குறிப்பிட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் போதிய அளவிலான விண்ணப்ப படிவங்களுடன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருப்பார்கள்.
தஞ்சை மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் எண் 6, பெயரை நீக்கம் செய்ய படிவம் 7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் எண் 8ஏ, பிழையை திருத்தம் செய்ய படிவம் எண்.8 ஆகிய படிவங்களை வாக்குச்சாவடியில் பெற்று பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடியில் வழங்கலாம். வரும் 22ம் தேதி வரை மேற்படி விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும்.வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரி வழியே ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : camp ,district ,Tanjore ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு