பாபநாசம், ஜன. 10: பாபநாசம் பகுதியில் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர்.பாபநாசம் அருகே சுந்தரபெருமாள் கோயில், கும்பகோணம் மாதுளம் பேட்டை ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் ரயில் வருவதற்கு முன் கேட் மூடப்பட்டு ரயில் சென்ற பிறகு கேட் திறக்கப்படுவதற்கு அதிகபட்சம் 5 நிமிடமாகிறது. இந்த நேரத்தில் கூட காத்திருக்க முடியாத வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கேட்டின் இடைவெளி வழியாக புகுந்து செல்கின்றனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. எனவே ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டின் இடையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகுந்து நடந்து செல்ல முடியாதவாறு முழுவதுமாக கேட்டை அடைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.