×

மற்றொருவர் படுகாயம் மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

தஞ்சை, ஜன. 10: தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை பிர்காவுக்கு உட்பட்ட வேங்கராயன்குடிக்காடு, அதினாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் மார்கழி பட்டமாக கடந்த மாதம் மக்காச்சோளம் விதைக்கப்பட்டது. தற்போது பயிர்கள் ஒரு அடியிலிருந்து இரண்டடி உயரத்துக்கு வளர்ந்து வந்த நிலையில் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்கி பயிர்களின் சத்தை உறிஞ்சி, சருகுபோல் காய்ந்து வருகிறது. இதனால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்த பகுதியில் மட்டும் 100 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 50 ஏக்கரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தென்படுகிறது. இவை தொடர்ந்து அடுத்தடுத்த விவசாயிகளின் சோளப்பயிர்களுக்கும் பரவி வருவதால் விவசாயிகள் செய்வதெறியாது திகைத்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் பயிர்களை அழித்து விட்டு மீண்டும் அந்த இடத்தை உழுது எள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வேங்கராயன்குடிக்காடு விவசாயி வில்லப்பன் கூறியதாவது: நான் மூன்றரை ஏக்கரில் மார்கழி பட்டமாக கடந்த டிசம்பர் மாதம் கிலோ ரூ.340 என 10 கிலோ விதையை தனியார் விதை விற்பனையகத்தில் வாங்கி விதைத்தேன். பயிர்கள் ஒரு அடி உயரத்துக்கு வந்ததும், இந்த புழு தாக்குதல் தென்பட்டது. உடனடியாக விதை விற்பனையகத்தில் சென்று கூறினேன். அவர்கள் தண்ணி மருந்து தெளிக்க வேண்டும் என கூறி ரூ.500க்கு பூச்சிக்கொல்லியை கொடுத்தனர். ஆனாலும் புழு கட்டுப்படவில்லை.
ஏக்கருக்கு உழவு, விதை, விதை நடவு, பூச்சிக்கொல்லி என ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் பயிரை காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இதேபோல் எங்கள் பகுதியில் மார்கழி பட்டத்தில் மக்காச்சோளம் விதைத்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மைத்துறையினர் இந்த புழுவை முழுமையாக கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்குவதோடு பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் கூறியதாவது: சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தென்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு உடனடியாக வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : plague attack ,American ,
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை