×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்

திருவண்ணாமலை, ஜன.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆருத்ரா தரிசன விழா இன்று நடக்கிறது. அதையொட்டி, நேற்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு மிக்கது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெறுகிறது.
அதையொட்டி, அலங்கார ரூபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர், காலை 9 மணி அளவில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது, கடந்த மாதம் 10ம் தேதி மலை மீது காட்சியளித்த மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), நடராஜருக்கு சிவாச்சாரியார்கள் அணிவிக்க உள்ளனர்.
பின்னர், அலங்கார ரூபத்தில் 5ம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது, மாணிக்கவாசக பெருமானும் மாடவீதியில் வலம் வருவார்.

அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக உற்சவ மூர்த்திகள் வீதிஉலா புறப்பாடு எப்போதும் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் வழியாக நடைபெறுவதே வழக்கம். ஆனால், நடராஜர் வீதிஉலா புறப்பாடு மட்டும் திட்டி வாசல் வழியாக நடைபெறுவதில்லை. திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு நடராஜர் வீதிஉலா செல்வது தனிச்சிறப்பாகும். இந்நிலையில், ஆருத்ரா விழாவில் சுவாமிக்கு தீப மை அணிவிக்கப்பட்ட பின்னர், மகாதீப ெநய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் தீப மை வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள், அதற்கான ரசீதை காண்பித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம்.

Tags : Natarajar ,Thiruvannamalai Annamaliyar ,Arutra Darshan Ayyangal Hall ,
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு