×

திருவண்ணாமலை கோர்ட்டில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ் 7 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது

திருவண்ணாமலை, ஜன.10: திருவண்ணாமலை கோர்ட்டில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை அரசு தரப்பு நேற்று வாபஸ் பெற்றதால், கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.
திருவண்ணாமலையில் கடந்த 28.8.2012 அன்று நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக அரசையும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதாக, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, ஒருமுறை மட்டும் விஜயகாந்த் நேரில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராக கோர்ட்டில் விலக்கு பெற்றார். மேலும், அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.

எனவே, கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. விஜயகாந்த் தரப்பில், அவரது வக்கீல் காளிங்கன் ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். இந்நிலையில், விஜயகாந்த் மீதான அனைத்து அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, திருவண்ணாமலை கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்ைக வாபஸ் பெறுவதாக, மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று அரசு தரப்பு வக்கீல் வேலு மனுதாக்கல் செய்தார். அதன்படி, இந்த வழக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

Tags : court ,Thiruvannamalai ,Vijayakanth ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...