திருச்செங்கோடு, ஜன.9: திருச்செங்கோடு கூட்டப்பள்ளியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திருச்செங்கோடு -ஈரோடு சாலையில் உள்ள கூட்டப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகள் மற்றும் வர்த்தக கடைகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் அனைத்தையும், சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். ஓட்டல், டிபன் கடைகளின் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், கோழி இறைச்சி கழிவுகள் என அனைத்தும் இங்கு கொட்டப்படுகிறது. தவிர, சாக்கடை கழிவுநீரும் கால்வாய் போல வந்து, குப்பை கொட்டியுள்ள இடத்தில் தேங்குகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி கடிப்பதால் அருகில் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த கொட்டப்படும் உணவு கழிவுகளை சாப்பிட கால்நடைகள், தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து கிளறுவதால் சாலையில் காற்றுக்கு குப்பை கழிவுகள் சிதறிக்கிடக்கிறது. பல மாதங்களாக தேங்கிக்கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றி, சாக்கடை கழிவுநீர் செல்ல வாய்க்காலை ஏற்படுத்தி தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.