குமாரபாளையம், ஜன.9: குமாரபாளையம் அரசு பள்ளியில் தேசிய மாணவர் படையினருக்கான செய்முறை தேர்வு முகாம் நடைபெற்றது. குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படையினருக்கான செய்முறை தேர்வு முகாம் நடைபெற்றது. டிரில், துப்பாக்கி, வரைபடம் உள்ளிட்ட பகுதிகளுக்காக நடைபெற்ற இந்த செய்முறை தேர்வில் 50 தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 25ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு என்சிசியில் ஏ கிரேடு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெறும் மாணவர்கள், ராணுவம், காவல்துறை, ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணியில் சேறும் போது, 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். தமிழ்நாடு 15வது பட்டாலியன் கர்னல் ஹென்றி ராபர்ட் ஆலோசனைப்படி, இந்த செய்முறை தேர்வுகள் துவங்கப்பட்டது. சுபேதார் முருகேசன், ஹவில்தார் மேஜர் அருணாச்சலம், கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வினை நடத்தினர். முகாம் நிகழ்ச்சிகளில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சந்திரசேகரன், தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.