×

திருக்காட்டுப்பள்ளி காவிரி- குடமுருட்டி பாலம் அருகில் ஏற்பட்ட பள்ளம் விரைந்து சீரமைப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 9: தினகரன் செய்தி எதிரொலியால் திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி பாலம் அருகில் ஏற்பட்டிருந்த பள்ளம் சரி செய்யப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்பே திருக்காட்டுப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து காவிரி, குடமுருட்டி என்று இரண்டாக பிரிந்து செல்கிறது. பழமையான இப்பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருவையாறு, பூண்டிமாதா கோயில், கல்லணை, கும்பகோணம், லால்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், அப்பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளுக்கும் சென்று வந்தன. இதனால் பாலம் மேலும் பலவீனமடையும் என்று போக்குவரத்துக்கு தனியாக ஒரு பாலம் கட்டி இப்பழமையான பாலத்தில் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டது. தற்போது பாலத்தின் குடமுருட்டி ஆற்று பாலம் அருகில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பல நேரங்களில் தடுமாறி விழுகின்றனர். மேலும் பாலத்தின் மேல் உள்ள தார்ச்சாலையும் பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கை செய்தி கடந்த 3ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று (8ம் தேதி) கருங்கல் ஜல்லியில் தார் கலந்து பள்ளத்தை மூடி சீரமைத்தனர். இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறைக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Thirukattupalli ,Cauvery - Kudamurutti Bridge ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை