மயிலாடுதுறை, ஜன.9: டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மதரீதியான தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் மணல்மேட்டில் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெறற கொடூர தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று கூறியும், தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும் என கோரி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். தொடர்ந்து கல்லூரி வாயிலில் அமர்ந்து மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.