மயிலாடுதுறை, ஜன.9: தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார். சாமிகணேசன், ஞானசேகரன், ஊமைத்துரை, ராமகிருஷ்ணன், கோவிந்தராஜன், திருவேங்கடம், கமலக்கண்ணன உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசிய சங்கத்தினர், தங்களது நீண்டகால கோரிக்கையான குறைந்தபட்ச தேசிய மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் என நிர்ணயம் செய்யவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கவேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும், வங்கிகளின் இணைப்பை கைவிடவேண்டும், ரயில்வே பாதுகாப்பு நிலக்கரை ஆகிய துறைகளில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மாவட்ட துணைதலைவர் நமசிவாயம் நன்றி கூறினார். மயிலாடுதுறையில் அனைத்து அரசு துறையும் வழக்கம்போல் இயங்கியது. தமிழ்நாடு அரசு துறையில் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர்.