×

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜன.9: திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். அதன்படி கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்றோ அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200ம், தேர்ச்சிபெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600ம் என இந்த உதவி தொகையானது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு - மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த (2019) டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் ஒராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை கோரும் விண்ணப்பதாரர்கள் உதவிதொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் தகுதியுடை விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் 28ம் தேதிக்குள் திருவாரூர் மன்னார்குடி சாலையில் இயங்கி வரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி