×

இஸ்லாமியர்கள் கோரிக்கை திருவாரூரில் 3.63 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருவாரூர், ஜன.9: திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 63 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு பை இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டமானது மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 லட்சத்து 63 ஆயிரத்து 763 குடும்ப அட்டைதாரர்களுக்கு 721 நியாயவிலைக் கடைகள் மூலமாக இன்று (9ம் தேதி) முதல் 12ம் தேதி வரையில் வழங்கப்படுகிறது. அதன்படி காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும், மதியம் 1.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் வழங்கப்படும். இந்த பரிசு பையில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தெரு மற்றும் பகுதி வாரியாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் வழங்கப்படவுள்ளதால் பொது மக்கள் இந்த வழிமுறையினை பின்பற்றி பெற்று கொள்ளலாம். மேலும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் வரிசையில் நிற்காமல் பொருட்களை பெற்று கொள்ளலாம். மேற்கண்ட 4 நாட்களில் பொருட்களை பெற முடியாதவர்கள் 13ம் தேதி பெற்றுகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvarur ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...