கோவை, ஜன.9: மலைவாழ், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் போதுமான அளவு மருத்துவ வசதி கிடையாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலையிருக்கிறது. பிரசவ வலி ஏற்பட்டால் ரோடு, வாகன வசதி இல்லாத பகுதியில் இருந்து கர்ப்பிணிகளை அழைத்து செல்ல முடியாத நிலையுள்ளது. சிலர் செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பெறுகின்றனர். இதுபோன்ற நிலையை தவிர்க்க கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கான காத்திருப்பு அறை அமைக்கப்படவுள்ளது. இந்த காத்திருப்பு அறையில் பிரசவ காலத்திற்கு இரு வாரம் முன் கர்ப்பிணி பெண்கள் தங்க அனுமதிக்கப்படுவர். கர்ப்பிணியுடன் உறவினர் ஒருவர் தங்கலாம். இரு வார காலமும் உணவு இலவசமாக வழங்கப்படும். இதன் மூலமாக டோலி கட்டி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு தூக்கி செல்வது தவிர்க்கப்படும். மேலும் காத்திருப்பு அறையில் தங்கியிருப்பவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். காத்திருப்பு அறை மூலமாக கர்ப்பிணிகளின் நலன் பாதுகாக்கப்படும். இந்த பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.