கோவை, ஜன.9: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எச்.ராஜா மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியபோது, குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.