ஊத்துக்கோட்டை, ஜன. 9: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் வெங்கல் மற்றும் வெங்கல் குப்பம், வெங்கல் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும். ஆனால், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த கட்டிடம் கடந்த 4 வருடங்களா க சேதம் அடைந்து மழை காலங்களில் மழைநீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்து, கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், இதை யாருமே பயன்படுத்தவில்லை.
இந்நிலையில், வெங்கல் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் தான் ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே, பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “வெங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஆகியவை நடைபெறும். ஊராட்சி மன்ற கூட்டம் இ-சேவை மையத்தில் தான் செயல்பட்டது. ஊராட்சி தலைவர் பதவியேற்பு விழாவும் இங்கு தான் நடந்தது. ஏனென்றால் பழைய கட்டிடம் பழுதடைந்து விழக்கூடிய நிலையில் தற்போது உள்ளது. இதுகுறித்து பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். எனவே பழைய ஊராட்சி கட்டிடத்தை அகற்றி புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும்” என கூறினர்.