×

காரில் கஞ்சா கடத்திய பேராசிரியர், சட்டக்கல்லூரி மாணவன் கைது

ஆவடி, ஜன. 9: அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் காரில் கஞ்சா கடத்திய விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர், சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.. அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கெனால் ரோட்டில் கொரட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது 1.4 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து காருடன் இரு வாலிபர்களையும்கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் பாடி, சீனிவாசன் நகர், காமராஜர் 2வது தெருவை சேர்ந்த ரிச்சர்டு (26) என்பதும், மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. மேலும், அவருடன் வந்த நபர் அண்ணாநகர் மேற்கு விரிவு, பார்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சட்ட கல்லூரி இறுதியாண்டு மாணவன் ராஜராஜன் (22) என்பதும் தெரிய வந்தது.இருவரும் எழும்பூரில் உள்ள வியாபாரியிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து தனது நெருங்கிய நண்பர்களுக்கு சப்ளை செய்ததாக கூறினர். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : law student ,
× RELATED பள்ளிகளுக்கு அருகில் நின்று...