×

கிரண்பேடியால் 2021 தேர்தலிலும் காங்கிரசுக்கு வெற்றி

புதுச்சேரி, ஜன. 9:   மோடி தலைமையிலான மத்திய அரசு தொல்லை கொடுப்பதற்காக கிரண்பேடியை பயன்படுத்தி கொள்கிறது, இதற்காக அஞ்சப்போவதில்லை. கிரண்பேடி பதவியில் நீடித்தால் 2021ம் ஆண்டு காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன் ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில் பூரணாங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்ட அரசு கிளை நூலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலக  திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அரசு கொறடா அனந்தராமன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு நூலகத்தையும், பஞ்சாயத்து அலுவலகத்தையும் திறந்து வைத்து பேசியதாவது:
புதுவையில் 71 நூலகங்களில் சில செயல்படவில்லை,  ஒப்பந்த அடிப்படையில் நூலக அதிகாரிகளை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம். கவர்னர்  தொல்லையெல்லாம் மீறி நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி  வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் அரிசி போடுவதற்கு ரூ.180 கோடி தேவை. அதனை பட்ஜெட்டில் ஒதுக்கி விட்டோம். மக்களுக்கு அரிசியாக வழங்க கவர்னர் தொடர்ந்து தடையாக இருக்கிறார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை நேரில் சந்தித்து அரிசி வழங்க வலியுறுத்தியபோது,  ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஒற்றை அவியல் அரிசியை அனுப்ப தயாராக இருப்பதாக கூறினார்.  தற்போது அரிசி கொடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  பணமாக ெகாடுக்க ஏற்றுக் கொண்டு 5 மாதத்துக்கான பணத்தை வழங்கியுள்ளோம்.  அரிசிக்கான  பணத்தை கணவன் எடுத்து செலவு செய்து விடுகிறார். மனைவியிடம்  கொடுப்பதில்லை.

உள்ளாட்சி தேர்தல் நடத்த ஒரு ஆணையரை நியமித்தால், அவரை நீக்கி விட வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிடுகிறார். அவருக்கு உள்துறை ஆதரவாக இருக்கிறது. இதனை எதிர்த்து உள்ளாட்சித்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்கிறார். நாங்கள் இரவு பகல் பாராமல் மக்களுக்காக உழைக்கிறோம். மத்திய அரசு உதவி செய்தால் மாநிலத்தின் வளர்ச்சி எங்கேயோ போய்விடும். யார் தொல்லை கொடுத்தாலும் அதனை எதிர்த்து சமாளிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு. மத்தியில் உள்ள மோடி அரசு நமக்கு தொல்லை கொடுப்பதற்காகவே கிரண்பேடியை பயன்படுத்துகின்றனர்.
இதற்காக அஞ்சப்போவதில்லை. இவர்கள் நம்மை எதிர்த்தால், நமக்குதான் வெற்றி, நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம். கிரண்பேடி இருந்தால் 2021லும் நாம் தான் வெற்றி பெறுவோம். நாம் வெற்றி பெறுவதற்கு சாதகமாக செயல்படுகிறார். மக்கள் நலத்திட்டங்களை அவர் புறக்கணிக்கிறார். நமக்கு உள்ள தொல்லையெல்லாம் நிரந்தரம் கிடையாது, இது தற்காலிகம்தான். நம்மை பிடித்த சனி எல்லாம் போக போகிறது. குடுகுடுப்பைக்காரன் கூறுவதுபோல் புதுவைக்கும் விடிவு காலம் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Congress ,
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்