விளாத்திகுளம்,ஜன.8: விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கணினி ஆய்வகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லிண்ட் சாந்தி முன்னிலை வகித்தார்.பிஎன்ஒய் மிலோன் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனர் வித்யா, அக்ரோ பவுண்டேஷன் இயக்குனர் கல்பனாராஜேஷ் மூலம் விளாத்திகுளம் அரசு மேல்நிலை பள்ளிக்கு 20 கணினியை இலவசமாக வழங்கினர். இதற்கான கணினி ஆய்வகத்தை பிஎன்ஒய் நிறுவன இயக்குநர் வித்யா திறந்து வைத்தார். கணினி ஆய்வகத்திற்கு தேவையான நாற்காலி, மேஜை உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளூர் நன்கொடையாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் சார்பாக வழங்கப்பட்டது. விளாத்திகுளம் ஆர்எம்ஜி குழுமத் தலைவர் ராஜகோபால், பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.1 லட்சம் வழங்கி மாணவர்களை வாழ்த்தி பேசினார். 1968ம் ஆண்டு பயின்ற பழைய மாணவர்கள் சார்பாக ரூ.2 லட்சம் மதிப்பிலான தண்ணீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கோவில்பட்டி கல்வி அலுவலர் மாரியப்பன், பள்ளி துணை ஆய்வாளர் சசிகுமார் ஆகியோர் பேசினர். கணினி ஆசிரியை ஜெமீமா தங்கரத்தினம் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.