துறையூர், ஜன.8: துறையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து சிஐடியூவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.துறையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க முற்படும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், அடுத்த சில ஆண்டுகளுக்கு பின்னர் பொதுத் துறைகளே இல்லாத நாடாக இந்தியா திகழும். இதன் மூலம் பொதுத் துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், சட்ட உரிமைகள், அனைத்திற்கும் மேலாக இட ஒதுக்கீடு என அனைத்தும் சமாதி கட்டப்படும். இதனை கருத்தில்கொண்டு மத்திய அரசை கண்டிக்கும் விதமாக சிஐடியூ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க பொருளாளர் ராஜு முன்னிலை வகித்தார். முன்னணி நிர்வாகிகள் பக்ருதீன், செல்வராஜ், மனோகரன், முத்தையா, செல்வகுமார் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.