×

ஆன்லைன் வர்த்தகத்தால் கைக்கடிகாரம் பழுது நீக்கும் பணி முடங்கியது

புதுக்கோட்டை,ஜன.8: தமிழகம் முழுவதும் கைக்கடிகாரம் பழுதானால் அதனை சரிபார்க்காமல் புதிய கடிகாரங்களை நுகர்வோர்கள் வாங்குவதால் கைக்கடிகாரம் பழுது நீக்கம் கடைகள் மூடப்பட்டு வருவதாக இந்த தொழிலில் ஈடுபடுவோர்கள் தெரிவிக்கின்றனர்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் என அனைத்து தரப்பினரும் நேரங்களை தெரிந்து கொள்ள கைக்கடிகாரம் கட்டுகின்றனர். கைக்கடிகாரம் தயாரிப்பு தொழிலில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. சிறிய குழந்தைக்கு கூட கைக்கடிகாரம் பல்வேறு வகையான மாடல்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் அனைத்து ததரப்பினருக்கும் பல்வேறு வகையான மாடல்கள் பல்வேறு வகையான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகமாக விற்பனையாகும் பொருட்களின் பட்டியலில் கைக்கடிகாரம் மெச்சத்தக்க இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கைக்கடிகாரங்களின் விலை அதிக அளவில் இருக்கும். இதனால் பழுது ஏற்பட்டால் அதனை அப்படியே போட்டு விடாமல் அதனை பழுது நீக்கி பயன்படுத்த தொடங்குவார்கள். தமிழகத்தின் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை கைக்கடிகாரம் ரிப்பேர் செய்யப்படும் கடைகள் அதிக அளவில் இருக்கும்.

இதேபோல் புதிய கைக்கடிகாரங்களின் விற்பனையும் செய்யப்படும் சில்லரை கடைகளும் பிரத்யோகமாக இருந்தது. குறிப்பாக கடிகாரத்தில் பேட்டரி மாற்றுதல், வார், முள் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்கள் விற்பனைசெய்யப்படும். மேலும் கைகடிகாரங்கள் நேரம் காட்டாமல் பழுதனால் அவர்களிடம் கொடுத்தால் சிறப்பாக சரிசெய்து மீண்டும் இயங்கும் வகையில் பழுது நீக்கி தருவார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் வந்தது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள உலகமயமாக்கல், தொழில்நுட்பம், நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகளால் கைக்கடிகாரங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் பழுது ஏற்பட்டால் அதனை அப்படியே விட்டுவிட்டு புதிய கடிகாரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பழுது நீக்கும் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் குறைந்ததால் சிறிய நகரங்களில் தற்போது பழுது நீக்கும் கடைகளை மூடிவிட்டனர். இந்த கடைகளை நடத்தி வந்தவர்கள் நகர் பகுதியில் மாற்று பணிக்கு சென்று விட்டனர். அவர்கள் கடைகள் நடத்தும்போது இருந்த பொருட்களை வேறு வழியின்றி பழயை இரும்பு கடைகளில் விற்பனை செய்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். இந்த நிலைக்கு முக்கியமான காரணம் ஆன்லைன் வரத்தகம் மற்றும் முன்னணி நிறுவனங்களின் போட்டியால் உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் கடிகாரம் விற்பனை தொழிலில் ஈடுபடுவோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது மாவட்ட தலைநகரங்களில் சில கடைகள் மட்டுமே இருக்கிறது.
இதேபோல் புதிய கடிகாரங்களுக்கு பிரத்யோகமான கடைகள் மாநகராட்சி போன்ற நகரங்களில் உள்ளது. தற்போது எந்த நிறுவனங்களின் கடிகாரங்கள் வேண்டுமானால் நுகர்வோர்கள் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிகொள்வது குறிப்பிடத்தக்கது. இதனால் கடிகாரம் பழுது பார்க்கும் கடைகள் அனைத்தும் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என கடை உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...