திருப்பூர், ஜன. 8: ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.என்.யு பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க தலைவர் உள்ளிட்ட பலரை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த சிலர் தாக்கினர்.
இதனால் ஏ.பி.வி.பி அமைப்பை தடை செய்ய கோரியும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாதர் சங்க மாவட்ட நிர்வாகி சகிலா, மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரவீன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினர்.