குன்னூர், ஜன.8:குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை மற்றும் குழந்தைகள் சாப்பிட கூடிய தின்பண்டங்களில் கலப்படம் அதிகம் இருந்ததால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்ததாலும் ரசாயன கலவைகள் கலந்திருந்ததாலும் அவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று சுற்றுலா தலங்களில் குழந்தைகள் சாப்பிட கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்ட ஜெல்லி, குளிர்பானம், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு தின்பண்டங்கள் உண்பதால் நரம்பு தளர்ச்சி, கேன்சர், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு முப்பதாயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும் கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இனி வரும் காலங்களில் கடை வியாபாரிகள் இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை விற்பனை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.