கம்பம், ஜன.8: கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளி சார்பில் “பிட் இந்தியா” மாரத்தான் போட்டி நடைபெற்றது. உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி “பிட் இந்தியா திட்டம்” என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளி சார்பில் “பிட் இந்தியா” மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியானது கம்பம் நகராட்சி உரக்கிடங்கு அருகே தொடங்கி கூடலூர்-கம்பம் சாலை வழியாக கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, பத்திர பதிவு அலுவலகம் வழியாக பள்ளியில் வந்து நிறைவடைந்தது. போட்டியை பள்ளி தாளாளர் அச்சுதநாக சுந்தர் துவக்கி வைத்தார். போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கம்பம் தெற்கு எஸ்ஐ அப்தாஹிர் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கவிதா, பள்ளி முதல்வர் கருப்பசாமி, நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.