சிவகங்கை, ஜன.8: திருப்புவனம் ஒன்றியத்தில் சுயேச்சைக் கவுன்சிலராக வெற்றி பெற்ற, அதிமுக ஊராட்சி செயலாளர் திமுகவில் இணைந்தார். திருப்புவனம் ஒன்றியம், குயவன்குளம் அதிமுக கிளைச் செயலாளர் மூர்த்தி. இவர், அதிமுக சார்பில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டார். ஆனால் வழங்கப்படவில்லை. இதனால், திருப்புவனம் ஒன்றியம் 5வது வார்டில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், மூர்த்தி திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். திருப்புவனம் ஒன்றியத்தில் மொத்தம் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணியில் 10, அதிமுக 3, அமமுக 1, தமாகா 2, சுயே 1 என கவுன்சிலர்கள் உள்ளனர். சுயேச்சை திமுகவில் இணைந்ததால், திமுக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், திமுக மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றியச் செயலாளர் கடம்பசாமி ஆகியோர் உடனிருந்தனர்.