மதுரை, ஜன. 8: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளையில் முறையிடப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் கண்ணன் ஆஜராகி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக ராமசாமி என்பவர் தரப்பில் ஒரு மனு செய்கிறோம். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். அதில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். ஆனால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல குழப்பங்கள் உள்ளன. ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் அனைத்து சமூகத்தினரையும் சேர்க்க வேண்டும். குழுவில் உள்ள தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை ஆண்டுதோறும் தேர்வு செய்ய வேண்டும்.