×

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் தயாரித்தால் 6 மாதம் சிறை தண்டனை

நாமக்கல், ஜன.8:நாமக்கல் மாவட்டத்தில் கைத்தறிகளில் நெய்ய வேண்டிய ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும், மத்திய அரசால் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, கரை மற்றும் முந்தியுடன் கூடிய துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள், விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் விசைத்தறிக் கூடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தறி ஒன்றுக்கு ₹5 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். எனவே, விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற திருச்செங்கோடு -தொண்டிக்கரடு ரங்கசாமிபிள்ளை முதல் தெருவில் இயங்கும், உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு