பள்ளிபாளையம், ஜன.8: தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு விரைவில் நடைபெறும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் பொங்கல் பரிசு வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு பை மற்றும் இலவச வேட்டி-சேலைகளை வழங்கினர்.
அப்போது, அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் காலி பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் வருவதற்கு முன் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளிக்கும் தகவல் மற்றும் மின்வாரிய ஆய்வுகளின் அடிப்படையிலும் புதிய மின் கம்பங்களை அமைத்து வருகிறோம். மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.