×

கிண்டி - பரங்கிமலை இடையே கிடப்பில் ரயில்வே சுரங்கப்பாதை பணி: கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

ஆலந்தூர்: கிண்டி - பரங்கிமலை இடையே கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலந்தூர் பச்சையம்மன் கோயில் ரயில்வே கேட் (எண்: 14) பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்தது. வேளச்சேரியில் இருந்து ஆலந்தூர் மற்றும் ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக வேலை, பள்ளி, மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த ரயில்வே கேட்டை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட்டை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். பல நேரங்களில் ரயில்வே கேட் மூடிய பிறகும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து சென்றதால், அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. எனவே, இந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு, அங்கு சுரங்கப்பாதை அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு  இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது. இதையடுத்து, இந்த பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் தொடங்கியது. முதற்கட்டமாக, வேளச்சேரிக்கு செல்லும் பாதையின் ஒருபகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட்டினால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த பணியும் நடைபெறாமல்  கிடப்பில் போடப்பட்டது.

விபத்தை தவிர்ப்பதற்காக  தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை பணி, பாதியில் நின்று விட்டதால் அவசரத்துக்கு  தண்டவாளத்தை கடந்து செல்பவர்களால் மீண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பெய்த மழையினால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இந்த சுரங்கப்பாதையில் தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரி, அப்பகுதி மக்கள் ரயில்வே துறை மற்றும் ஆலந்தூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கழிவுநீரை அகற்றி, சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kindi ,Parangimalai ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது