×

தி.நகர் பிரபல துணிக்கடையில் பல லட்சம் மதிப்புள்ள துணிகளை அபேஸ் செய்த ஊழியர் சிக்கினார்: ஓராண்டாக கைவரிசை காட்டியது அம்பலம்

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் கடந்த ஓராண்டுகளாக பல லட்சம் மதிப்புள்ள துணிகளை திருடிவந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணி (33) என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர், பணி செய்யும் பிரிவில் விலை உயர்ந்த துணிகள் மட்டும் மாயமாகி வந்தது. இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர்.

இதையடுத்து, துணிக்கடை நிர்வாகம் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, ராமசுப்பிரமணியன் தனது ஆடைக்குள் விலை உயர்ந்த துணிகளை தினமும் திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மறுநாள் ராமசுப்பிரமணியனை துணிக்கடை ஊழியர்கள் கண்காணித்தனர். அப்போது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள துணியை திருடியபோது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் துணிக்கடை சார்பில், பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர் ராமசுப்பிரமணியனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஓராண்டாக பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த துணிகள் திருடிச் சென்று, வெளியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்த, ராமசுப்பிரமணியனை கைது செய்தனர்

Tags : millions ,
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்