×

நடுக்கடலில் மீனவர் பலி: மற்றொருவர் மாயம்

தண்டையார்பேட்டை: காசிமேடு சி.ஜி.காலனியை சேர்ந்த கண்ணகி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுனர் ஆனந்த் தலைமையில் 5 பேர், நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். எண்ணூர் துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில் வலை விரித்து மீனுக்காக காத்திருந்தனர். அப்போது படகு டிரைவர் ஆனந்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு நிலை தடுமாறி கடலில் விழுந்தார். இதனை கண்டு சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்பதற்காக மற்றொரு மீனவர் சேகர் என்பவர் கடலில் குதித்து ஆனந்தை மீட்டு தூக்கினார்.

படகில் இருந்த மற்ற 3 பேர் ஆனந்தை படகில் ஏற்றிவிட்டு பார்த்தபோது அவர் உயிர் பிரிந்திருந்தது. மேலும், ஆனந்தை மீட்க கடலில் குதித்த சேகரை தேடிப்பார்த்தபோது அவர் கடலில் மாயமாகி இருந்தார். உடனடியாக ஆனந்த் உடலுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த மற்ற மீனவர்கள் சம்பவம் தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரை பெற்று கொண்ட போலீசார் கடலில் மாயமான சேகரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...